Wednesday, September 18, 2013

மனிதன் சுயநலவாதியா !?

ஆம் ! மனிதன் ஒரு சுயநலவாதியே !?

இன்றைய காலத்தில் அனைத்து தரப்பிலும் ஆழமாக வேரூன்றி புரையோடி அனைவரையும் ஆட்டிப்படைக்கும் மனிதனின் மாறுபட்ட மற்றுமொரு மனமே சுயநலம் எனும் குணமாகும். சுயநலமில்லாமல் யாருமில்லை என்று சொல்லுமளவுக்கு உறவுகளானாலும்,நட்புகளானாலும், அரசியலானாலும், ஆண்மீகமானாலும், இன்னும் பல கொடூர சம்பவங்களான வன்செயல்கள், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றவியல் சம்பவங்கள் சுயநலத்தை அடிப்படையாய் கொண்டு தான் நடந்து கொண்டிருக்கிறது. மனிதன் தன் சுய தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு வேண்டியே இத்தகைய கொடுஞ்செயல்களை செய்கின்றான். இதுவே நிதர்சன உண்மையாகும். சுயநலம் என்பது இவ்வுலகில் நம் ஒவ்வொரு மனிதனின் மனதையும் ஆக்கிரமித்து கொண்டு இருக்கின்றன.

தன் சுயகாரியங்களுக்கா சந்தர்ப்ப சூழ்நிலையை காரணமாக்கிக்கொண்டு மனிதன் மனம் மாறும் கலையை சுயமாக கற்றுவைத்துள்ளான். இதை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் விடயம் கிட்டும்.

முதலில் உறவுகளைப்பற்றி பார்ப்போம்...

ஒரு குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களாக தாய்,தந்தை,சகோதரர்,சகோதரி மற்றும் மாமன்,மச்சான் என்று ஒன்றாக வாழ்ந்து வந்தாலும் அன்பு பாசம் மட்டும் சரிசமமாக இருப்பதில்லை. அவரவர்களுடைய வருவாய், பணம், பதவி, புகழ், என அதை வைத்தே நிர்ணைக்கப்படுகிறது. காரணம் தனது தேவைகளை இவன்தான் பூர்த்தி செய்வான் என்ற எண்ணம் மேலோங்கி சுயநலத்திற்காக போலியான பாசம் காட்டப்படுகிறது.. சகோதரியானவள் தன் சகோதரன் தனக்கு பணம் பொருள் உடமைகள் அனைத்தும் வாங்கித்தருவான் என்ற சுயநலத்தில் மற்ற சகோதரனை விட அங்கு பாசம் அதிகமாக காட்டப்படுகிறது. அன்பு பாசம் அளந்து வாங்கும் விலை பொருள் போல அளவிட்டு வழங்கப்படுகிறது.

ஆக தன் பிள்ளையிடமோ, சகோதர சகோதரியிடமோ தன்னம்பிக்கை இல்லாமல் சுயநலம் தலைதூக்கி நின்று பாசத்தை ஒருத்தருக்கு தூரமாக்கியும் ஒருத்தருக்கு அருகில் வைத்தும் வித்தியாசமாக்கி காட்டப்படுகிறது.அப்படியானால் இதை சுயநலம் என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்வது ?

நாம் சிறு பருவத்தில் சிறகடித்து பறந்து வளம் வந்த நட்புகூட இன்றைய கால மாற்றங்களில் பணத்திற்காகவும் புகழுக்காகவும் தன் நண்பனிலும் உயர்ந்த நிலையில் உள்ளோரிடம் நட்பை ஏற்ப்படுத்திக் கொண்டு அதை நன் மதிப்பாய் கருதுகின்றனர். காரணம் ஏழ்மையிலும் இயலாமையிலும் இருக்கும் இவனை நண்பன் என்று சொல்லிக்கொள்வதில் எந்த புண்ணியமும் இல்லை என்று கருதி தன் காரியங்களை நிறைவேற்றிக்கொள்வதற்க்காகவும், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்த்தை ஏற்ப்படுத்திக்கொள்வதற்க்காகவும் அத்தகைய நட்பையே அவசியமாக கருதுகின்றனர். இன்னும் சிலறதுமனம் என்றாவது ஒரு நாள் பழைய நட்பை நினைத்துப் பார்க்கும் தருணத்தில் கூட. சுயநலம் குறுக்கிடுவதால் தடுத்துக்கொள்ளவே எண்ணுறது. அப்படியென்றால் இந்நட்பை சுயநலம் என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்வது ?.

அரசாழ்பவர்கள் தன் அரசை தக்கவைத்துக்கொள்ள மக்கள் நலம் மக்கள் சேவை என்ற பெயரில் நாட்டு நலப்பணியில் கவனம் செலுத்தாமல் அடுத்து வரும் தேர்தலில் தேர்வாகுவது எப்படி என்ற எண்ணத்துடன் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டனவா ? இலவசங்கள் அனைத்து இடங்களுக்கும் விநியோகப்பட்டு விட்டதனவா ? வெற்றி பெறச்செய்த தொகுதி மக்களுக்கு இன்னும் ஏதாவது செய்யலாமா ? என்ற எண்ணத்தில் தான் அரசாழ்கிறார்கள். அதிகபட்ச அரசியல்வாதிகளின் மனநிலை இப்படித்தான் உள்ளது. அப்படியானால் இங்கு பொதுநலனை விட சுயநலமே மேலோங்கி நிற்கிறது.

அடுத்து சில ஆன்மீகவாதிகள் தாம் வருவாய் ஈட்ட வேறு வழிதெரியாமல் ஆன்மீகமெனும் பெயரில் மனிதர்களை மடையர்களாக்கி மூட நம்பிக்கைகளுக்கு உட்படுத்தி எந்த உழைப்பும் இல்லாமல் பெரும் பணமெய்தி விடுகிறார்கள்.அத்துடன் நிறுத்திக்கொள்ளாது இறை வேதத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கற்பனைக்கதையளந்து காண்போரை மெய்சிலிர்க்க வைத்து பொய்ப்பிரச்சாரங்கள் பல செய்து தன்னை பெரிய ஒரு ஆன்மீகவாதியாக சித்தரித்து போலி வேசமிட்டு புனித மனிதனாய் வளம் வந்து எண்ணிலடங்கா சொத்துகளுக்கு எஜமானராகும் அவலமும் இவ்வுலகில் நடந்து கொண்டிருக்கிறது. [ சுகபோக வாழ்க்கை வாழ்ந்து முடித்த பிறகே அரசின் கவனத்திற்கு செய்தி போய் விலங்கிட்டு அழைத்துச்செல்வது என்பது வேறு விஷயம் ] இவை அனைத்தும் மனதை சுயநலம் ஆக்கிரமித்து விட்டதால் கிடைத்த மோசடி யோசனைகள் தானே ! இதை சுயநலம் என்று சொல்லாது வேறு என்னென்று சொல்ல முடியும்..?

அடுத்து சொல்லப்போனால் அந்தந்த ஊர்களில், கிராமங்களில் இருக்கும் பஞ்சாயத்து எனும் அமைப்புக்கள் குடும்பப்பிரச்சனைகள், சொத்துப்பிரச்சனைகள், இன்னும் பல சிறு சிறு பிரச்சனைகளுக்காக ஊர் பெரியவர்களை நாடிப்போகிறவர்களுக்கு சரிவர நியாயம் கிடைப்பதில்லை. காரணம் அந்த இரண்டு தரப்பினரில் ஒரு தரப்பினர் தனக்கு வேண்டியவராக அல்லது தொழில் செய்வதில் இணைந்து இருக்கலாம். அல்லது அவருடைய தேவைகளை பூர்த்திசெயபவராகவோ, அரசு அதிகாரியை பழக்கம் கொண்டவராகவோ இருக்கலாம். அவருடைய உதவி தமது சொந்தப் பிரச்சனைகளுக்கு தேவைப்படும் என்ற சுய நலத்தால் தீர்ப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கே பாதகமாக மாறி விடுகிறது. உண்மை அங்கு தோற்றுப்போய் விடுகிறது. பாதிப்படைந்த நபர் விரக்தி ஆவதுடன் அவனது வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடுகிறது. இப்படி தீர்ப்பு சொல்பவர்களை சுயநல வாதிகள் என்று சொல்லாமல் வேறு எப்படிச்சொல்வது ?

இன்னும் சிலர் குடும்ப பிரச்சனைகளாலும், கடன் பிரச்சனைகளாலும், மற்றபடி சராசரி ஏற்ப்படும் கணவன் மனைவிக்குள் நடக்கும் பிரச்சனைகளாலும் சிறிதும் யோசிக்காது அடுத்த நிமிடமே வாழ்வில் விரக்தியுற்று தற்கொலை என்னும் கோழைத்தனமான முடிவெடுத்து தம்மைச்சார்ந்த உறவுகள், அனைவர்களையும், தன் செல்ல பிள்ளைகளையும், கணவன், மனைவி,தாய் தந்தை,அண்ணன் அக்கா தம்பி தங்கை என எல்லோரையும் ஏங்க வைத்து விட்டு நிம்மதியுடன் எமலோகம் சென்று விடுகிறார்கள். தன் பிள்ளைகளை கேள்விக்குறியாக்கி விட்டு, தன்னைப் பெற்றவர்களை வாழ்நாள் முழுதும் ஏங்க வைத்து விட்டு தன் கூடப் பிறந்தவர்களை தவிக்க விட்டு விட்டு தான் மட்டும் பிரச்சனையிலிருந்து தப்பியோடி மரணத்தை விரும்பி அணைத்துக்கொள்ளும் இப்படியொரு கோழைகளை சுயநலவாதிகள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது ?
அடுத்து சமூக மக்களை பார்க்கப்போனால் இங்கு அவரவர் காரியங்களுக்கும், அவரவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கும் பொது நலமென்னும் போர்வையில் பேசப்படும் வார்த்தைகளிலும் செயல்களிலும் சுயநலமே ஒளிந்து கிடக்கிறது.
அவரவர் தேவைகள் பூர்த்தியானதும் வாய்கிழியப் பேசியவர் வாயடைத்துப் போய்விடுவர். அடுத்தவர்கள் எப்படிப்போனால் எனக்கென்ன என்ற சுயநல எண்ணம் வந்து விடுகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் கொண்டுள்ள மனிதனை சுயநலமென்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது ?

அற்ப சுயநலங்கள் மனிதனிடத்தில் பல்லாயிரம் வகைகள் இருப்பினும் அடுத்தவர்களின் மனநிலையையும் வாழ்க்கையையும் பாதிக்கும் சுயநலங்களே மேற்குறிப்பிட்ட சுயநலங்களாகும். இப்படி சுயநலத்தில் மனிதன் நடந்து கொள்ளும் விதங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வுலகில் சுயநலமில்லா மனிதனைக் காண்பது அரிதிலும் அரிதே ! ஆகவே நாம் முடிந்தவரை சுயநலத்தை கலைந்து பொது நலத்துடன் நம் வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டு நமது பிற்ச்சன்னதியருக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டுவோமாக !!!

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.