Wednesday, September 18, 2013

முதுகில் குத்தும் மனிதர்கள்

பாருலகில் நாம் காணும்
பகட்டான மனிதர்கள்
பல்லிளிக்க பேசி
பகையவனிலும் கொடிய
குணம் கொண்டவாராய்
பாரினிலே உலாவரும்
பச்சோந்திகளே
முதுகில் குத்தும்
மனிதர்கள்

சுயநலத்தின் போர்வையிலே
பொதுநலத்தை புனைந்திட்டு
தூயவராய் துகில் பாடி
துவேசமனம்
கொண்டவர்கள் தான்
முதுகில் குத்தும்
மனிதர்கள்

அகமொன்றும் புறமொன்றும்
அபிநயிக்கும் வித்தை கற்று
ஆறாத ரணமாக
ஆழ்மனதை ஆக்கிடும்
அர்த்தமற்ற உறவார்தான்
முதுகில் குத்தும்
மனிதர்கள்

காரியத்தில் கண்வைத்து
கண்ணியமாய் உரைநடத்தி
மாறுபட்ட தோற்றத்திலே
மாறி மாறி வேஷமிடும்
மனம் படைத்தவர்களே
முதுகில் குத்தும்
மனிதர்கள்

தற்பெருமை தலைக்கணமாய்
தன்புகழை தரணி போற்ற
தக்க சமயத்தில் உறவாடி
தயங்காது களையருக்கும்
தரமில்லா வர்க்கம் தான்
முதுகில் குத்தும்
மனிதர்கள்

நேசமெனும் வார்த்தைக்கு
நீங்காத கலங்கமெய்து
நட்பு எனும் சொல்லுக்கு
நா தனிலே நச்சிட்ட
நயவஞ்சக மனிதர்களே
முதுகில் குத்தும்
மனிதர்கள்

நிலையில்லா வாழ்க்கையிலே
நிலைமாறும் மனிதனிவன்
பார்ப்போரும் பணிந்திடவே
பாவனையை அரங்கேற்றும்
பன்நடிப்பு கற்றவரே
முதுகில் குத்தும்
மனிதர்கள்

மனிதநேயம் தழைத்தோங்க
மாறாக நாம் வாழ்ந்து
புறமுதுகில் குத்தாத
புண்ணியனாய்
பார் போற்ற
வாழ்ந்திடுவோம்
பகையோரையும்
அணைத்திடுவோம் !
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.