Thursday, January 30, 2014

எங்க முதலாளி !? தங்க முதலாளி !?


முதலாளி என்ற வார்த்தையை கேட்கும் போதே ஒரு தொழிலாளியின் மனதில் தனி மரியாதை, பயம், பதஸ்ட்டம், படபடப்பு எல்லாம் ஏற்படும். காரணம் அரசு வேலைக்கு விண்ணப்பித்து அலையாய் அலைந்தும் வேலைவாய்ப்பு கிடைக்காமல்,ஏங்குபவர்களுக்கும், கல்வியறிவில் பின்தங்கி இருப்பவர்களுக்கும் நடுத்தர,ஏழைகளுக்கும் தனியார் நடத்தும் கம்பெனி பெரிய முதலாளிகளிலிருந்து சிறுதொழில் செய்து வரும் சிறிய முதலாளிமார்கள் வரை அத்தனை வகை முதலாளிகளும் அவரவர் தகுதிக்கான வேலை வாய்ப்பைக் கொடுத்து வருகின்றனர். அப்படிக் கொடுக்கும் வாய்ப்பைக்கொண்டுதான் பலரின் குடும்பங்கள் கொஞ்சம் நிம்மதியுடன் வறுமையிலிருந்து விடுபட்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.

சில முதலாளிமார்கள் சிடுமூஞ்சிக்காரர்களாக இருப்பார்கள் . ஆனால் இரக்க குணமும்,உதவிசெய்வதில் தாராள மனமும் உள்ளவர்களாக இருப்பார்கள். சிலர் அமைதியாக இருப்பார்கள் ஐந்து நயாபைசாகூட அதிகமாக எதிர் பார்க்கமுடியாது ஆனால் சம்பளத்தை மட்டும் சரியாக கொடுத்து விடுவார்கள். இன்னும் சில முதலாளிமார்கள் பொய் சொல்வது, திருடுவது, கெட்டபழக்க வழக்கங்கள் இருப்பது தெரிந்தால் உடனடியாக அந்தநிமிடமே வேலையை விட்டுத் தூக்கிவிடுவார்கள். சில முதலாளிமார்கள் கண்டிப்புடன் அறிவுரை சொல்லி எச்சரித்து வேலைக்கு வைத்துக் கொள்வார்கள்.ஒரு சிலர் யாரிடம் என்ன கெட்டபழக்கம் இருந்தால் நமக்கென்ன நேரம்தவறாமல் வேலைக்கு வந்து தவறு இல்லாமல் வேலை செய்தால் சரி என்று சுயநலமாக சிந்திப்பவர்களும் உண்டு. இப்படி முதலாளிமார்களில் பல ரகமாக இருப்பார்கள்.

ஒவ்வொரு முதலாளிமார்களும் குணத்தால் வெவ்வேறான வகையில் மாறுபட்டு இருந்தாலும் நிலைபாட்டில் பல குடும்பங்கள் அந்த முதலாளிமார்கள் கொடுக்கும் வேலைவாய்ப்பில் வாழ்ந்து கொண்டு இருப்பது உண்மைதானே.! அப்படியானால் அந்த முதலாளிமார்களும் நன்றியுடன் போற்றப்பட வேண்டியவர்கள்தானே.!

வேலையும் கொடுத்து மாதாமாதம் தவறாமல் சம்பளமும் கொடுத்து நிரந்தரமாக பணிக்கு வைத்துக் கொள்வதால் அந்தமனிதர் பணியாளர்களின் கண்களுக்கு மதிக்கத்தக்க மனிதராகத் தெரிகிறார்கள். பெரும்பாலான முதலாளிமார்கள் பரம்பரை முதலாளி வாரிசாக வந்தவர்கள் அல்ல.. ஆரம்பகாலத்தில் தொழிலாளியாக வேலைபார்த்து கடினமாக உழைத்து பின்பு சுயதொழில் தொடங்கி கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்து வந்து இன்று பெரிய முதலாளியாகி பெயரும், புகழுடனும் இருப்பவர்களும் உண்டு.

இப்படி அடிமட்டத்திலிருந்து வந்த நல்ல தொழில் அனுபவமிக்க முதலாளிமார்களிடம் முறையான நடவடிக்கைகள் விதிமுறைகள் பேணப்படும்.பணியாளர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்கிற பக்குவம் தெரிந்திருக்கும்.பணியாளர்களை எப்படி நடத்துவது என்பதினையும், பல நெளிவுசுளிவுகளையும் நன்கு அறிந்து வைத்து இருப்பார்கள்.

நல்ல விசுவாசமான பணியாளராய் இருந்து முதலாளிமார்கள் கோபத்தில் ஏதாவதுபேசுவதையெல்லாம் பெரும்பொருட்டாக எடுக்காமல் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் முழுகவனம் செலுத்தி நேர்மையாக நடந்து கொண்டால் எவ்வளவு மோசமான நடவடிக்கை உள்ள முதலாளிமார்களின் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிடலாம்.

அது போன்று முதலாளிமார்களும் தான் ஒரு முதலாளி என்ற தலைக்கனமில்லாமல் பணியாளர்களை அரவணைத்து நடந்து கொள்வாரேயானால் அந்தப் பணியாளர்களும் பொறுப்புடன் தனது பணியினைச் செய்வார்கள்.. மென்மேலும் தொழில் சிறக்க முன்னேற்றமடைய அது வழி வகுக்கும். தொழிலாளர்களைச் சந்தோசப்படுத்தும் முதலாளிமார்கள் தோற்றதாகத் தெரியவில்லை.

அதுபோல என்னதான் குறைகளுள்ள முதலாளிமார்களாய் இருந்தாலும் நடுத்தர மக்களையும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களையும், வாழவைத்துக் கொண்டு அவர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து கொண்டிருப்பது இந்த தனியார் முதலாளிமார் களாகத்தான் இருக்கமுடியும்.

முன்கோபம், எடுத்தெறிந்து பேசுதல், கெட்ட செயல்பாடுகள், வேலைக்கு தாமதமாக வருவது ஆகிய குறைபாடுகளைத் தவிர்த்துக் கொண்டு முதலாளியின் குணமறிந்து ஒரு தொழிலாளி நடந்து கொண்டாரேயானால் அவர்களது வாழ்வு மிகச் சிறப்பாக இருக்கும். இப்படி நடந்து கொள்பவர்கள் நாளைய முதலாளியாக வருவதற்கு வழிவகுக்கும்.

இன்று முதலாளியாக இருக்கும் பலர் ஒருகாலத்தில் தொழிலாளியாய் இருந்து கடும் உழைப்பால் கஷ்டப்பட்டு முன்னேறி முதலாளிகளாய் ஆனவர்கள்தான். அவர்களுடைய பிந்தையகால அனுபவமும், விடாமுயற்ச்சியும், தன்னம்பிக்கையும் தான் முதலாளி ஸ்தானத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.

ஆகவே வேலையில்லாதோருக்கும் நடுத்தரவர்க்கத்தினருக்கும் வறுமையில் உள்ளோர்க்கும் வேலை வாய்ப்பளித்து வயிற்றுப்பசியை போக்கும் முதலாளிமார்களிடம் நல்ல விசுவாசியான வேலைக்காரனாக இருந்து பல தொழில் அனுபவம் பெற்று உயர்ந்து தாமும் ஒரு வருங்கால தங்க முதலாளியாக தம்மை வளர்த்துக் கொள்ள முயற்ச்சிப்போம்..!!!

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.