Friday, October 4, 2013

[ 2 ] ஏங்கி நின்றான்..! ஏக்கம் தொடர்கிறது...


முடிவுற்றது அயல்நாட்டு வாழ்க்கை
முடிவுதெரியா அவன் வாழ்வை எண்ணி
ஏங்கி நின்றான்...!

மாமன் மச்சான் உறவுகள் வந்து
மகிழ்வோடு நலம் விசாரித்து
முடித்து வந்த செய்தி கேட்டு
முகம் சுழித்த காட்சி கண்டு
ஏங்கி நின்றான்...!

கட்டியவள் கண்கலங்க
காண மனம் வெட்கப்பட
தொட்டினில் அழும் பேத்தி சப்தம்.
கேட்டு அவனும் தூக்கிடவே
நெஞ்சம் துடிக்க
ஏங்கி நின்றான்...!

ஒரு தட்டில் சோறுண்டு
ஒரு கட்டிலினில் படுத்துறங்கி
கால நினைவு கண்ணில் வர
உள்ளமெல்லாம் நெகிழ்ந்து அவனும்
ஏங்கி நின்றான்...!

தான் கண்ட இன்ப வாழ்வு
தன்னில் தூரமாகி போனதென்று
உள் நெஞ்சம் உருகி அவனும்
உறக்கமில்லா கனவு கண்டு
ஏங்கி நின்றான்...!

ஆறில் பட்ட கஷ்டமெல்லாம்
அறுபது வரை ஆராப்புண்ணாய்
நோவும் மனதை கண்ணீரால் கழுவி
நொந்து அவனும்
ஏங்கி நின்றான்...!

பால மகன் பள்ளி சென்று
படித்து நம்மைக்காப்பான் என்று
பஞ்சனையில் அவன் கிடக்க
பகல் கனவில்
ஏங்கி நின்றான்...!

ஏழுறவும் எட்டுத்திசையில்
அவன் புலம்பல் யார் அறிவார்
பாலுறவில் பகைவரான
பந்தங்கள் அவன் நினைத்து
ஏங்கி நின்றான்...!

பிள்ளை அவன் வீடு திரும்ப
பேதை என் நெஞ்சம் படபடக்க
எழுந்தமர்ந்து பாசம் காட்ட
என் தளர்வை எண்ணி அவனும்
ஏங்கி நின்றான்...!

செல்லமகனே கண்ணுறங்கு
தங்கமகனே கண்ணுறங்கு
தாலாட்டுப்பாடி அவனும்
தூங்க வைத்த காட்சி நினைத்து
ஏங்கி நின்றான்...!

அதிரை மெய்சா
ஏக்கங்கள் தொடரும்...

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.