Wednesday, September 25, 2013

சமூக விழிப்புணர்வுப் பக்கங்களில் வெளியான கவிதை இலண்டன் தமிழ் வானொலியில் ஒளிபரப்பு [ காணொளி ] !



இலண்டன் தமிழ் வானொலி தனது கவிதைகளை வாடிக்கையாக ஒளிபரப்புச் செய்வதன் மூலம் அதிரைக்கு முன்னோடியாகவும், எதிர்கால தலைமுறையினருக்கு நல்லதொரு வழிகாட்டியாகவும் திகழ்ந்து கொண்டுருக்கின்ற 'கவியன்பன்' அபுல் கலாம் அவர்களின் வரிசையில் அதிரை மெய்சா அவர்களின் 'ஏங்கி நின்றான் !' என்ற தலைப்பிட்ட விழிப்புணர்வுக் கவிதையை இலண்டன் தமிழ் வானொலியில் கடந்த [ 11-04-2013 ] அன்று ஒளிப்பரப்பு செய்தது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.




ஏங்கி நின்றான் ! ஏக்கம் தொடர்கிறது…
பள்ளிப்பருவத்து முன்பருவத்தில்
பகல் உணவில் கூட பால் தந்த
அந்த அன்னையின் பாசம்
இன்று தூரமாகி போனதை எண்ணி
ஏங்கி நின்றான் !

பள்ளிப்பருவம் எட்டியதும்
பார்ப்போர் வியக்க பணிவிடை செய்து
பாடசாலை அனுப்பி வைத்த காட்சி நினைத்து
ஏங்கி நின்றான் !

படித்தது போதும் என்று
பாதிலேயே கல்வி விட்டு
பன்னாட்டு விமான நிலையம் கண்டு
புலம்பெயரும் கனவு சுமந்து
பாசத்தை தூரமாக்கி
ஏங்கி நின்றான் !

வாப்பா பார்த்து, உம்மா பார்த்து
வரதட்சணை கண் மறைத்து
வாயாடிப்பெண்ணை மணந்து
அன்புக்காக
ஏங்கி நின்றான் !

வாப்பாவை பார்க்காமலே
வாப்பாவின் பாசம் அறியாமலே
மூன்றுவயதை தொடும்போது
தாயகம் போய்
தான் ஈன்ற தங்கப்பிள்ளை
தன்னிடம் வருமா என்று
ஏங்கி நின்றான் !

சுற்றித்திரிந்த காலங்களில்
சுதந்திரம் கற்றுத்தந்து
பட்ட கஸ்டங்களில்
பாதி பங்கெடுத்த
அன்பு நண்பர்களை பிரிந்து
ஏங்கி நின்றான் !
.
அயல்நாட்டு நிரந்தர வாழ்க்கை
நிரந்தரமாக அந்நியமாகி
அனாதை போல் வாழ்ந்து விட்டு
முதுமை அடைந்தும் அறியாமல்
முடியாமல் ஊர் திரும்பும் காலம் வந்து
உறவுக்காகவும்
உண்மையான அன்புக்காகவும்
ஏங்கி நின்றான் !
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.