Friday, November 8, 2013

எதுக்கும் நல்ல மனசு வேணும் !


மனமிருந்தால் மார்க்கமுண்டு என்றொரு முதுமொழி உண்டு. எந்த ஒரு காரியமானாலும் வேலையானாலும் மனம் வைத்து மனமுவந்து செய்தால் அந்தக் காரியம் நேர்த்தியாக செய்யப்படுவதுடன் நலமாகவே அமையும். கடமைக்காக செய்யும் வேலைகள் கார்த்திகை மாசத்து மழைத்தூரளாய் முழுமைபெறாமல் சிதறிப்போய் விடும்.

இன்றைய நிலையில் எத்தனையோ பற்பல விதமான பணிகள் இவ்வுலகில் நடந்து வருகின்றன. கட்டிடப் பணி முதல் கணினி இயக்கும் பணி வரை அத்தனை பணிகளிலும் அதிகபட்சம் குறைகள் உள்ளனவாக இருக்கிறது. அதன் மூல காரணம் என்ன வென்றால் மனம் வைத்துச் செய்யும் பணியை விட கடமைக்காகச் செய்து விட்டுப் போகும் பணியே அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இத்தகைய அலடசியப் போக்காக செய்யும் பணியை நினைத்தால் மனதிற்கு சற்று வேதனையாகத்தான் இருக்கிறது.. அப்படி கடமைக்காகச் செய்யும் பணிகள் அந்த நேரத்தில் எல்லாம் சரியெனத் தோன்றும். பின்விளைவுகளை நினைத்துப் பார்க்காமல் செய்யும் இத்தகையப் பணிகளால் மன உளைச்சல்,நஷ்ட்டம் ஏற்படுதல், பணவிரையம்,நேரம் விரையம் என்றும் சிறிது காலம் கழித்து மிகப்பெரிய உயிரிழப்பு உடைமை இழப்பு என்று ஏற்ப்படும்.

அப்போது பாதிப்படைந்தவர்களுக்கு எப்படி ஆறுதல் கூறினாலும் இழந்த உயிரையும் ஊனத்தையும் திரும்ப மீட்டு விட முடியாது. இருள் சூழ்ந்த சோகத்தை போக்கி விட முடியாது.சற்று சிந்திப்போமாக...!!!

இதுமாத்திரமல்லாது பணியில் அலட்ச்சியப் போக்கு பெரும்பாலான அரசுப் பணிகளிலும் படித்த விஷயமறிந்த அலுவலர்களும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஐந்தோ பத்தோ நிமிடத்தில் முடித்துக் கொடுக்கும் வேலைக்காக நாட்கணக்கில் அலைக்கழித்து மன உளைச்சலை ஏற்ப்படுத்துகிறார்கள். சிலர் ஒரு சான்றிதழ் வேண்டியோ, அல்லது ஒரு கையொப்பம் வேண்டியோ வெளியூரிலிருந்து வெகு தொலைவிலிருந்து வந்திருப்பார்கள். அவர்களின் சிரமங்களை சிறிதளவேனும் நினைத்துப் பார்க்காமல் காலம் தாழ்த்துகிராகள்.

இப்படி செய்வது தன் கடமை தவறுவதுடன் காலதாமதமானதால் அந்நபரின் பல வேலைகளும் முடங்கிப் போய் அவர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகின்றார்கள்.

அப்படியே மனமிறங்கி அந்த வேலையை செய்து கொடுத்தாலும் மனசு வைத்து செய்யாமல் கடமைக்காக செய்து கொடுத்து விட்டு ஏதாவது ஒன்றை விட்டு விடுகிறார்கள்.அல்லது தவறாக பதிந்து விடுகிறார்கள். பிறகு அவர்கள் செய்த தவறுக்காக பொதுமக்கள் பாதிப்படைவதுடன் பொதுமக்களின் நேரமும்,பணமும், வீண்விரயமாகி மன அழுத்தத்தில் பல நோய்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப் படுகிறார்கள். இத்தகைய அலட்சியப் போக்கான பணி அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

மேற்க்கத்திய நாடுகளுக்குச் சமமாக நமது நாடும் எல்லாம் நவீனமாக்கப்பட்டு பல வகையிலும் முன்னேறிக்கொண்டு இருக்கிறது. உதாரணத்திற்கு. அனைத்து தஸ்தாவேஜுகளும், கடவுச் சீட்டுமுதல் கல்லூரிச் சான்றிதழ் வரை எல்லாம் கம்பியூட்டர் பதிவு மயமாகி விட்டது. ஆகவே ஒரு எழுத்துப் பிழையானாலும் பொதுமக்களின் அனைத்து வேலைகளும் தடைபட்டுப் போகும் சூழ்நிலை உள்ளது.இது பற்றி அனைத்து தரப்பு அதிகாரிகளும் நன்கு அறிந்ததாகும்.அப்படி இருக்கும் போது பொறுப்புணர்வோடு அக்கறை செலுத்தி அப்பணியை செய்து கொடுத்தல் அவசியமாகிறது.

இக் குறைபாட்டை யார் தான் சரி செய்வது..???

பதில் மனசாட்சியிடம் தான் உள்ளது.ஒரு மனிதனிடம் மனசாட்சி சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். இத்தகைய தவறுகள் அதிகமானால் மனசாட்சி மனிதனிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருப்பதாகவே அர்த்தமாகிறது.

ஆகவே எந்த ஒரு வேலையானாலும் முழுமனதுடன் செய்ய வேண்டும். முடியாதபட்சத்தில் அதைச் செய்யாமல் இருப்பதே நலம் பயக்குமே அன்றி அரைகுறை வேலையும் அலட்சியமாக செய்யும் வேலையும் தனது பணிக்கும் பதவிக்கும் ஆபத்தை ஏற்ப்படுத்துவதுடன் பிறர்க்கும் பலனளிக்காதுபோகும். என்பதை உணர்ந்து நம் நாட்டின் வளர்ச்சிக்கு இத்தகைய அலட்சியப் போக்கில்லாத பணியும் மிக அவசியம் என்பதை அறிந்து கவனமுடன் நமது கடமையைச் சீராகச் சிறப்புடன் செய்வோமாக..!!!

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.