Friday, September 20, 2013

சமையல்ல இம்பூட்டு சங்கதியா !?


ஒவ்வொரு கலைஞனுக்கும் அவரவர் துறையில் ஆர்வமும் மோகமும் எப்படி உள்ளதோ அது போலத்தான் சமையல் செய்வதும் ஒரு கலை உணர்வைச்சர்ந்தவையே..! சமையெலுக்கென படிப்பு என்று ஒன்று இருந்தாலும், அனுபவத்தில் சமைக்கும் சமையலின் ருசியே தனிதான். ஒவ்வொருவருடைய கைப்பக்குவமும் வெவ்வேறு ருசியை கொடுப்பது சமையலின் தனிச்சிறப்பாகும்.அடுத்து சொல்லப்போனால் சமையல் என்பது எல்லோரும் செய்து விட முடியாது. ஏனென்றால் இதற்கு மூலதனமாக ஆர்வமும் அக்கறையும் பொறுமையான மனபக்குவமும், கவனமும், நினைவாற்றலும், தன் நம்பிக்கையும், வேண்டும். இதில் ஒன்று குறைந்து விட்டாலும் சமையலின் தரம், சுவை குறைந்து விடும்.

நம் நாட்டை பொறுத்த மட்டில் வீட்டுச்சமையல் என்றால் அது பெண்கள் மட்டும் செய்யும் வேலையென எழுதப்படாத சட்டமாக வைத்துள்ளோம். ஆனால் மேலை நாடுகளில் வீட்டுச்சமையல் வேலைகளை பெண்களை விட ஆண்களே அதிக எண்ணிக்கையில் சமைத்து தமது மனைவி பிள்ளைகள் உறவினர்கள், விருந்தினர்களென அனைவருக்கும் பரிமாறுகிறார்கள். அதை அங்கு யாரும் பெரும் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.

வெளிநாடுகளில் பணி புரியும் நம் நாட்டவர்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் அநேகமாக சொந்தமாகவே தான் சமைத்து சாப்பிடுகிறார்கள். சமைக்கத் தெரியாமல் சமைக்கத் தொடங்கி ஆரம்ப காலத்தில் சுவையில்லாமல் வீணடித்து விடா முயற்சியாக களமிறங்கி சமையல் கலை வல்லுனர்களாக சிறந்து விளங்கியவர்களும் நிறைய பேர் உண்டு. நாம் சொந்தமாக சமைத்து சாப்பிடுவதே உடல் நலத்திற்கு நலமானதாகும். நீண்ட நாள் உயிர்வாழ சுத்தமான சமையலும் ஒரு காரணமாக இருக்கிறது. ஏனென்றால் வீட்டுச்சமையலில் அனைத்துப்பொருட்களும் நல்ல முறையில் சுத்தம் செய்து சுத்தமான பாத்திரங்கள், பாட்டில்களில் வைத்திருப்போம். மீண்டும் எண்ணெய் மற்றும் உடலுக்கு சீக்கிரம் கேடு விளைவிக்கும் பொருட்களை நிகர அளவை விட குறைத்து உபயோகிப்போம். மருத்துவர்களின் அறிவுரையும் அதுவே..!

முன்பொரு காலத்தில் நமதூரிலும் நமதூரை சுற்றியுள்ள பிற ஊர்களிலும் திருமணம்,மற்றும் பல சுப காரியங்களுக்கு பெரிய அளவில் [விருந்து] சமைப்பதற்கு வேண்டி ஒரு சில பகுதிகளில் மேஸ்திரி என்றும் பண்டாரி என்றும் அழைக்கப்படும் சமையலில் பிரசித்தி பெற்ற பல சமையல் வல்லுனர்கள் இருந்தார்கள் அவர்களின் மறைவிற்கு பிறகு விரல் விட்டு எண்ணும் அளவில் தான் ஒரு சிலர் சமையல் வேலையில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்.

ஆகவே இன்றைய காலகட்டத்தில் நிலைமை எப்படி இருக்கிறதென்றால் ஒரு திருமண நிகழ்வுக்கோ வேறு விஷேச நிகழ்வுக்கோ குறிப்பிட்ட தேதியில் சமையலுக்கு ஆள் கிடைப்பார்களா..? என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு கொண்ட பிறகே அந்த விழாவின் தேதி குறிப்பிடும்படியாக உள்ளது. அந்த அளவுக்கு சமையல் என்பது யாவற்றிலும் முக்கியம் அங்கம் வகிக்கிறது.எனவே சமையல் கலையை முறையாக பயின்று பலன் பெற பல உயர்தர கேட்ரிங் கல்லூரிகள் உள்ளன. அவற்றில் சென்று முறையாக பயின்று சமையல் கலையில் வெற்றி பெறலாம்.

பத்தும் வகுப்பு வரை படித்து தேர்ச்சியானவர்கள், +2 படித்து முடித்தவர்கள் மேற்ப்படிப்பு படிக்க விருப்பமில்லையெனில் சமையல் முறைப்படிப்பான கேட்ரிங் படிக்கலாம். இது நம் வாழ்க்கைக்கு பயன் தரும் படிப்பேயாகும். வேலை வாய்ப்புக்களும் நிறைய உள்ளது. அல்லது சுய தொழிலாக செய்தாலும் நல்ல வருமானம் ஈட்டலாம். தனக்கென்று எப்பொழுதும் எங்கு சென்றாலும் கை கொடுக்கும் ஒரு தொழிலாகவும் பயனளிக்கும்.

ஆகவே இன்றைய காலகட்டத்தில் கேட்ரிங் என்னும் சமையல் முறைப்படிப்பை ஆண்,பெண் இரு பாலரும் படித்து சமையல் கலை அறிந்து கொண்டால் தனக்கென ஒரு தொழிலையோ வேலையையோ நிலை நாட்டி கொள்ளலாம். இப்போது நம் நாட்டிலும், உலகில் உள்ள அநேக நாடுகளிலும் கேட்ரிங் படித்து டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.

எல்லோரும் மருத்துவராகவும், இன்ஜீனியராகவும், விஞ்சானியகவும் ஆகிவிட்டால் சமையல் கலையை யார் தான் அறிந்து கொள்வது !?

இன்று நம் கண்முன்னே காண்கிறோம் உலக பிரசித்து பெற்ற எத்தனையோ உணவு வகைகள் உள்ளன. அந்த உணவு வகைகள் எத்தனையோ கோடீஸ்வரர்களை உருவாக்கி தனக்கென்று ஒரு முத்திரையுடன் உலகை வளம் வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே உயர் கல்வி கற்க விருப்பம் இல்லாதவர்கள் சமையல் கலையை முறையாக பயின்று வென்று வந்து விட்டால் நீங்களும் ஒரு சாதனையாளர்களாகவோ, தொழிலதிபர்களாகவோ திகழலாம்...!!!
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.