Friday, September 20, 2013

மாணவர்களுக்கு விழிப்புணர்வைத் தருமா.? இந்த டிப்ஸ் !


சமுதாயத்தில் மாணவர்களின் கடமையும், பங்கும் நிறைய உள்ளது. ஒவ்வொரு மாணவர்களும் பொறுப்புடனும், கடமையுணர்வுடனும், கல்விகற்றால் கற்ற கல்வியை பயன்படுத்தி நம் நாட்டிலேயே பணிசெய்வதிலோ, தொழில்செய்வதிலோ, அரசியலிலோ, கண்டுபிடிப்புக்களிலோ ஈடுபட்டு வந்தால் நம்நாடு முன்னேற்ற நாடுகளில் முதல் தரத்தை பிடித்துவிடும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை. இதற்கு ஆசிரியர்களுடைய ஒத்துழைப்பும், ஊக்கப்படுத்துதலும் அவசியம் வேண்டும். விழிப்புணர்வு என்பது ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஆரம்பக்கல்வி கற்கும் போதிலிருந்தே ஆழ்மனதில் உதித்துவிட்டால் அம்மாணவனின் மனதில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் உருவாகிவிடும். அப்படி ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு ரீதியாக உயர்ந்து விட்டால் பொருளாதாரத்திலிருந்து அனைத்து துறையிலும் சிறந்து விளங்கி வறுமையில்லாத, சுத்தமான, சுகாதாரமான, அழகிய இந்தியாவை உருவாக்கிவிடலாம். அதன் அடித்தளமாக தேவைப்படுவது தான் விழிப்புணர்வு

இதோ எனக்குத்தெரிந்த சில விழிப்புணர்வு டிப்ஸ் !

1. மிக முக்கியமாக மாணவர்கள் தினமும் பாடசாலை செல்ல, தேர்வு எழுத,உடற்பயிற்சி செய்ய , மற்றும் பள்ளி நிகழ்சிகளுக்கு செல்லும் போது நேரம் தவறாமையை [ Punctuality ] பழக்கத்தில் கொண்டு வரவேண்டும். [ ஆரம்பத்திலேயே இப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் நாம் வேலைக்கு செல்லும் காலத்தில் நேரம் தவறாது வரும் நல்ல பணியாளர், நல்ல மேலாளர் என்ற நன் மதிப்பை ஏற்படுத்துகிறது.மற்றும் நினைவாற்றல்,மனதிற்கு புத்துணர்ச்சி தரும்.பிற்காலத்தில் அலார ஒலிச்சப்தம் கேட்டால் தான் எழ முடியும் என்ற நிலை மாறும் ]
2. பள்ளி செல்ல ஆயத்தப்படுத்திக்கொண்டு இருக்குபோதே நாம் என்னென்ன எடுத்துச்செல்லவேண்டும் என்பதை ஒவ்வொன்றாக யோசித்து நினைவு படுத்திக்கொண்டு எடுத்துச்செல்ல வேண்டும். [ குறிப்பு [ Notes, Diary ] எழுதி வைத்துக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. இது பிறகு நமக்கு பெரிய எழுத்தாளராகவோ, சிறந்த அரசியல்வாதியாகவோ உருவாக உதவும் ]

3. விடுமுறை காலங்களில் மாணவர்கள் வீணாக பொழுதை கழிக்காமல் ஒன்று கூடி நம் வசிப்பிடங்களில் நாம் வசிக்கும் ஊர்களில் மரக்கன்று நடுதல், சுத்தம் செய்தல்,முதியோர்களுக்கு உதவி செய்தல்,மற்றும் நாட்டு நலன் கருதி பொதுச்சேவை செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.[ இதை பழக்கத்தில் கொண்டு வந்தால் நமது வசிப்பிடம்,ஊர் சுத்தமாவதுடன் நோய்களை தடுக்க உதவும், பெரியோர்களின் நன் மதிப்பை பெறுவது மட்டுமல்லாது நமது ஊருக்கும் நற்ப்பெயர் ஏற்படும். நமது பிற்காலத்தில் பொதுச்சேவைகள் செய்ய நல்ல அனுபவமாக இருக்கும் ]

4. மாணவர்கள் ஜூனியர், சீனியர் என்று ரகம் பிரித்து ஏற்ற தாழ்வு பார்த்து பழகாமல் நாம் அனைவரும் மாணவர்கள் என்பதை மட்டும் மனதில் கொண்டு எல்லோருடனும் ஒற்றுமையாக இருந்து நல்ல விசயங்களை பகிர்ந்து கொண்டு நட்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். [ இந்தப்பழக்கம் நமது பிற்கால வாழ்வுக்கு ஒற்றுமையான நல்ல சமுதாயத்தை உருவாக்க பயன்படும். சமூக நலனில் அக்கறை கொண்டு ஏற்ற தாழ்வு பாராமல் பழக உதவும் ]

5. ராக்கிங் என்னும் பெயரில் கீழ்த்தரமான முறையில் நடந்து சக மாணவர்களை இழிவு படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். [ இதில் பாதிப்படைந்து பாதியிலேயே படிப்பை நிறுத்தும் மாணவர்கள் பிற்காலத்தில் வன்செயல் புரிபவர்களாகவோ, மனசாட்சியில்லாதவர்களாகவோ, மோசடி செய்பவர்களாகவோ ஆகி விட வாய்ப்பு உள்ளது ]

6. மாணவர்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக அவசியமான ஒன்று. அவசியம் மாணவர்கள் தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.நமக்கு உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதுடன் நமது பள்ளிகளுக்கும் நன் மதிப்பை பெற்றுத்தருகிறது. நமது வாழ்க்கைக்கும் உதவுகிறது. [ ஒரு ராணுவ வீரராக ஒரு காவல் துறை அதிகாரியாக தன்னை உயர்த்திக்கொள்ள உடற்பயிற்சி அவசியம் தேவைப்படுகிறது. எத்தனையோ,வீரர்கள், வீராங்கனைகள் பல விளையாட்டுத்துறையில் ஈடுபட்டு சாதித்து சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்து நம் நாட்டிற்கு பெருமை சேர்த்து இருக்கிறார்கள் ]

7. நமக்கு கல்வி பயின்று தரும் ஆசான்களையும், பெற்றோகளையும், தன்னிலும் மூத்தவர்களையும் மதித்து நடப்பதுடன் அவர்களின் அறிவுரைகளை ஏற்று மாணவர்கள் நடக்க வேண்டும். [ அப்படி ஆசிரியரை பெற்றோர்களை,தன்னிலும் மூத்தவர்களை மதித்து நடக்கும் மாணவர்கள் தான் பிற்காலத்தில் சமூகத்தினரால் மதிக்கப்படுவதுடன் நல்ல மனிதன் என்ற பெயரையும் பெற்று புகழுடன் வாழ்கின்றனர் ]

8. நம்மால் முடியும் சாதித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை ஒவ்வொரு மாணவர்கள் மனதிலும் அழுத்தமாக பதிய வேண்டும். [ பல இழிவுச்சொல்லுக்கு ஆளானவர்களே மனம் தளராது விடா முயற்சி செய்து இன்று பெரும் தொழில் அதிபர்களாகவும்,தலைவர்களாகவும் உள்ளார்கள் ]

9. தாழ்வு மனப்பான்மையை மனதில் ஏற்படுத்தி கொண்டு தற்கொலை போன்ற விபரீத முடிவு எடுக்காமல் சாதித்து காட்டி தன்னை தூற்றியோர் முன் போற்றப்பட்டு வாழ்ந்து காட்ட வேண்டும். [ எதிர் நீச்சல் போட்டு வாழும் வாழ்க்கையிலேயே இன்பம் இருக்கிறது. துணிந்து நில், தொடர்ந்து செல்,தோல்வி கிடையாது என்ற தாரகை மந்திரத்தை மனதில் கொண்டு எதையும் எதிர்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். வெற்றி நிச்சயம் கிட்டும் ]

10. எச்சூழ்நிலையிலும் வன்செயல்களுக்கும், அராஜகப்போக்கிற்க்கும், தீவிரவாதத்திற்கும் துணை போகாமல் தான் கற்ற கல்வியை நாட்டிற்காகவும் நாட்டுமக்களுக்காகவும் பயன் படச்செய்ய வேண்டும். [ நாட்டு மக்களுக்காக மாணவர்களின் பங்கு மிக முக்கியமானவை. இதை மனதில் கொண்டு ஒவ்வொரு மாணவனும் தான் படித்த படிப்பை பயனுள்ள வகையில் நம் நாட்டிலேயே உபயோகித்தால் வளமான இந்தியாவை உருவாக்க வழி செய்யும்]

மாணாக்கர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதுடன் தினமும் விழிப்புணர்வை பற்றிய செய்திகளையும்,சம்பவங்களையும் கொஞ்சம் சிரமம்பாராது ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கலாம். அது மேலும் மாணவர்களுக்கு சக்தியுட்டுவதாக அமையும்.மாணவர்களும் ஆசிரியர்கள் கூறும் அறிவுரையை ஏற்று அதன்படி நடக்க முயற்ச்சியுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வருங்கால வாழ்வு ஒளிமயமாக இருக்கும்.

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.