Tuesday, May 27, 2014

அரசியலும், ஆட்சி மாற்றமும் !!!

கடந்தகால ஆட்சியிலே
நடந்த நிகழ்வு ஏராளம்
கல்லும் முள்ளும் நிறைந்திட்ட
கடந்த பாதை வெகுதூரம்


பத்து வருட ஆட்சியிலே
பித்துப் பிடித்துப் போயினரே
பசிக்கும் வயிற்றுக்கு பாலூற்ற
பாவித் தலைவர்கள் மறந்தனரே

நித்தம் விலைவாசி ஏறியதே
நெஞ்சில் அம்பாய் பாய்ந்ததுவே
குத்தம் எம்பக்கம் இல்லையென
குரங்கு வித்தை காட்டினரே

பித்தம் தெளிவித்த நாட்டுமக்கள்
பின்னால் தள்ளி விரட்டினரே
ஆட்சிமாற்றத்தை ஏற்ப்படுத்தி
அவையில் அடுத்தோரை அமர்த்தினரே

ஊன ஆட்சி செய்ததினால்
உள்ளம் கொதித்து வாக்கிட்டு
தானம் செய்து வழங்கிடவே
தருணம் நோக்கிப் பெற்றனரே

மக்கள் கொடுத்த தீர்ப்புயிது
மதியுணர வைத்த பாடமிது
சொப்பனம் கொண்ட பதவியிது
சோபிக்க நல்ல நேரமிது

அந் நன்றியின் நற்கடனாய்
அகிலமே போற்றிடும் நல்லாட்சி
அமைக்கும் கடமை உமதன்றோ
அன்பின் கட்டளை தானன்றோ

சிறுபான்மை மக்களுக்கும்
சீராய் சலுகைகள் வழங்கிடனும்
பெரும்பான்மை மக்களையும்
பேதமின்றி நடத்திடனும்

அருமை ஆட்சி நடத்திட்டால்
அனைவரும் போற்றுவர் உம் புகழை
வெறுமை நீக்கி ஒற்றுமையாய்
வீரத்தைக் காட்டனும் வளர்ச்சியிலே

பாமர மக்களின் வாழ்வினிலும்
பூ மணம் வீச செய்திடணும்
பகட்டாய் ஆட்சி செய்தோர்க்கு
பாடம் புகட்டிக் காட்டிடணும்

படைத்தவன் பயமென்றும் இருந்திடனும்
பகையோனும் உணர்ந்திட நடந்திடணும்
கொடுத்திடும் கரமென்றும் உயர்ந்திடணும்
கொள்கையில் நேர்மையை கொண்டிடனும்

மதவாதக் கொள்கையை விட்டிடனும்
மனமெல்லாம் ஒன்றாக கூடிடனும்
ஜனநாயகம் என்றென்றும் தழைத்தோங்க
ஜாதிமத பேதமின்றி நடத்திடணும்

யார்வந்து ஆட்சியில் அமர்ந்தாலும்
எம்மக்கள் தெளிவாக உள்ளனரே
நன்மைகள் செய்வோர்க்கு நல்வாக்கை
நாளெல்லாம் கொடுத்திட்டு மகிழ்வனரே

எத்தனை காலம் தான் இவ்வாழ்வு
யாருக்கும் இவ்வுலகம் நிலையன்றோ
இருக்கும் காலத்தை பொன்போன்று
இன்பமாய் அமைதியாய் வாழ்வது நன்று

எத்தனை கட்சிகள் ஆண்டாலும்
இகத்தின் முடிவினில் இறையாட்சி
அத்தனை ஆட்சியும் அடிபணிய
ஆண்டவன் கட்டளை அதுவன்றோ

அதிரை மெய்சா 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.