Wednesday, September 18, 2013

பிரச்சனைகள் தீர தற்கொலை ஒரு தீர்வா.!?

இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே பிரச்சனைகளையும் கூடவே சுமந்து கொண்டு தான் பிறக்கிறான். பிரச்சனை என்பது நமது நிழல் போல நம்முடன் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்ற நிழல் உருவமாகும்.
அது முழுமையாக இல்லையெனினும் இவ்வுலக வாழ்வில் சுவராஷ்யம் இல்லாத ஒரு ஊட்டசக்தி இல்லாத குழந்தை போல வெறும் ஜடமாய் உணர்வற்று உணர்ச்சிபூர்வமான, அனுபவபூர்வமான நிகழ்ச்சி, சம்பவம் யாதும் தெரியாமலே போய்விடும். பிரச்சனையில்லா வாழ்க்கை உப்பில்லாபண்டம் போல சுவையில்லா வாழ்க்கை என்று கூட சொல்லலாம். இவ்வுலக வாழ்வில் பிரச்சனைகள் யாருக்குத்தான் இல்லை.அதற்காக தற்கொலை என்பது நல்ல ஒரு தீர்வாகாது. அதனால் மேலும் பிரச்சனைகள் உருவாகி வளரவே வாய்ப்பு உள்ளது.

பிரச்சனை இல்லாத மனிதனே இவ்வுலகில் இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ரீதியில் பிரச்சனையை சந்தித்து கொண்டுதான் வாழ்க்கையெனும் சக்கரத்தை சுழல வைத்து கொண்டு இருக்கிறான். . ஏழையானாலும், பெரும் செல்வந்தரானாலும், இதற்க்கு யாரும் விதி விலக்கல்ல. வாழ்க்கையில் பிரச்சனை இருக்கலாம் ஆனால் பிரச்சனையே வாழ்க்கையாக ஆக்கிக்கொள்ளாமல் நாம் தான் அதை எதிர்நோக்கி கையாள பழகிக்கொள்ள வேண்டும்.

இதற்க்கு பக்கபலமாக இருப்பது பகுத்தறிவுச்சிந்தனையும்,விழிப்புணர்வுடன் இருப்பதும்,தன்னம்பிக்கையும், சிந்தித்து செயல்படுவதும், எதையும் எதிர்கொள்ளவும், எதையும் பெரும்பொருட்டாக எடுக்காத மனப்பக்குவமும் தான்.அவசியம் வேண்டும். பொறுத்தார் பூமி ஆழ்வார், பொறுமை கடலினும் பெரிது. இப்படி எத்தனையோ முதுமொழி கேள்விபட்டு இருக்கிறோம்.. மேற்ச்சொன்னவைகளை நாம் முறையாக கடைபிடித்தோமேயானால் தற்கொலை எனும் கோழைச்செயலை விடுத்து சாதித்துக்காட்டவும்,நம்மை இகழ்ந்தோர் முன் எப்படி புகழாரம் கொள்வது என்றும், ஏமாற்றியவர் முன் வாழ்ந்து காட்டவும், தன் மற்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மாற்றுச்சிந்தனைகள் மனதில் தோன்றும்.

இதை விடுத்து பின்விளைவுகள் யாவையும் நினைத்துப்பார்க்காமல் தற்கொலை என்னும் கோழைத்தனமான முடிவு எடுப்பதினால் தமக்கு தீர்வாகத்தெரிந்தாலும் தமது பிள்ளைகளையும், தாய், தந்தை, கணவன், மனைவி, தம்மைச்சார்ந்தவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி ஆராத ரணமாக மனம் நிம்மதியற்று வாழ்நாள் முழுதும் வேதனையடையச்செய்து விட்டு நம்மிலிருந்து மறைந்து விடுகிறார்கள். தான் மட்டும் தப்பித்தோம் என்று நினைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது நியாயமற்றதே.! சற்று சிந்திப்போமாக !

நாம் இறப்பதற்காக பிறந்தவர்கள் தான். ஆனால் இறப்பை தாமே
தேடிக்கொள்வதல்ல. அதே சமயம் நம்மைத்தேடி இயற்கை மரணம் வரும்போது நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். இயற்கை மரணம் என்பது இறைவனின் ஏட்டில் பொறிக்கப்பட்டவை. அதனை மாற்றியமைக்க நமக்கு அதிகாரம்மில்லை. இறைநம்பிக்கை உள்ளோர்க்கு இதன் முழுமை விளங்கும். உயிர் என்பது இவ்வுடலை இயங்க வைக்க யாவருக்கும் இறைவன் இரவலாய் வழங்கியுள்ள மூச்சுக்காற்றாகும். இரவலாய் பெற்றதை நம் இஷ்டத்திற்கு கையகப்படுத்தக் கூடாது. இவ்வுலகின் அனைத்து சொத்தையும் விற்றுக்கொடுத்தாலும் யாரும் பெறமுடியாத விலை மதிப்பிட முடியாத, இரவல் சொத்தான இந்த உயிரை மலிவாய் போக்கலாகுமா..? சற்று சிந்திப்போமாக.! இரவலாய் கொடுத்து இறைவன் நம்மனைவர்களுக்கும் வழங்கிய இந்த உயிரை இறைவன் திரும்பப்பெற்றுக்கொள்ளும் காலம் வரை நாம் தான் பாதுகாத்து கொள்ள வேண்டுமே தவிர மாறாக மாய்த்துக் கொள்வது எந்தவிதத்திலும் நியாயமில்லை.

மனிதன் தோன்றிய காலம் முதல் இந்த நிமிடம் வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் மூளையின் செயல்பாடுகள் அசுர வளர்ச்சியடைந்து மூக்கில் விரல்வைக்கும் அளவுக்கு எத்தனையோ எண்ணில் அடங்கா கண்டுபிடிப்புக்கள் கண்டுபிடித்து இவ்வுலகை ஆட்டிப்படைக்க நினைக்கும் மனிதனால் ஒரு உயிரை உருவாக்க முடியுமா..? அல்லது உயிரற்று கிடக்கும் உடலுக்கு உயிரைத்தான் புகுட்ட முடியுமா..? அது எக்காலத்திலும் சாத்தியமாகாத ஒன்று. காரணம் அது இறைவன் தன் வசமாக வைத்திருக்கும் உன்னத பொருளாகும். இப்படி சிறப்பு மிக்க இந்த உயிரை அற்ப உலகின் சொற்ப பிரச்சனைகளுக்காக போக்கிக்கொள்ளுதல் நியாயமற்றதே..!

எவ்வளவோ நாகரீகம் வளர்ந்தாலும் உலகில் தற்கொலை நின்ற பாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பது வேதனைக்குரிய விசயமாக இருக்கிறது. மக்களிடையே இறைநம்பிக்கை இன்னும் முழுமையாக சென்றடைய வில்லை என்றே தோன்றுகிறது. அடுத்து பகுத்தறிவும், தன்னம்பிக்கையும்,விழிப்புணர்வு என இன்னும் மக்கள் சரிவர பெற வில்லைஎன்றே தெரிகிறது. மன விரக்தியில் பின் விளைவுகளை சிந்திக்காமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அது போன்றே மனவிரக்தியடைந்து தன் தாயையோ தன்பிள்ளையையோ சகோதர சகோதரியையோ பறிகொடுத்தவர்கள் அதே விரக்தியில் தாமும் தற்கொலை எனும் கோழைத்தனமான முடிவெடுத்தால் இவ்வுலகமே ஒரு நொடியில் மயானக்காடாய் மாறிவிடும்.ஆகவே தற்கொலை என்பது பிரச்சனைகளுக்கு ஒருபோதும் தீர்வாகாது.

ஆகவே இனிவரும் தலைமுறையினர் தற்கொலை என்றால் என்னவென்று கேட்கும் அளவுக்கு தற்கொலைக்கு முடிவெடுக்கும் கோழை மனதை தூரக்களைந்து வாழ்வில் ஏற்ப்படும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி கண்டு சாதித்து காண்பித்து சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பெற்று சமுதாயம் போற்றும் நன் மக்களாக வாழ்ந்து இந்த அமானிதமெனும் இரவல் சொத்தான இறைவன் யாவருக்கும் வழங்கியுள்ள உயிர் எனும் மூச்சுக்காற்றை இறைவன் திரும்பப்பெறும் வரை எக்களங்கமும் இன்றி பாதுகாத்து ஒப்படைப்போமாக !

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.