Friday, September 13, 2013

காற்று

உணரமட்டுமே முடிந்த
உன்னதப் பொருள் நீ


என்னதொரு ஆச்சரியம்
உன் வருகையை நாடி
இவ்வையகமே காத்திருக்கும்

கண்ணில் தென்படாத நீயே
இவ்வுலகை இயங்கவைக்கும்
உருவமற்ற எரிபொருள்

அசையும் அசையா
அனைத்து ஜீவன்களின்
ஒவ்வொரு ஒளிநொடியும்
உன்னை உட்கொண்டுதானே
இப்புவியில் நிலைகொண்டிருக்கிறது

உன் தீண்டலில் தானே
இவ்வுலகே தாண்டவமாடுகிறது
தன்னிலையும் உணர்கிறது

உன் கோரப்பசிக்கு
அவ்வப்போது உணவாகும் உயிரினம்கூட
உன் வருகை நின்று போவதாலும்
வீழ்ந்து மடிகிறது

கண்ணில் புலப்படா உனது மண்டலத்தில்
எரிவாயு என்றும் விஷவாயு என்றும்
இதமாய் வீசும் தென்றலென்றும்
பதமாய் தீண்டும் பெரும் புயலென்றும்
பன்முகம் காட்டும் நாயகனாம் நீ

இயற்க்கைக்கு நல்லுணவாய்
இயங்கி வாழ மூச்சுக்காற்றாய்
அனைத்திற்கும் அத்தியாவசியமாய்
ஆதிக்கம் செலுத்தி ஆழ்பவன் நீ

சுவாசம் விட்டுப்போனாலும்
உன் வாசம் விட்டுப்போகாது
நிலைகொண்டு
நீர்,நிலம்,நெருப்பினும் மேலாய்
இவ்வுலகை வாழவைக்கும்
வாயுப் பொருளான நீ

சுழன்று கொண்டிருக்கும்
இப்புவியின் கடைசிச்சுற்றுவரை
நீயே இப்பூலோகத்தின் நிரந்தர ஹீரோ


அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 25-07-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. இதோ அதன் காணொளி...


1 comment:

  1. நல்லதொரு கவிதை !

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.