Sunday, April 19, 2015

நேரமும் காலமும் !

நேரமும் காலமும்
நேர்த்தியாய்ச் செல்லனும்
நிகரில்லா நேரத்தை
நிம்மதியாய் கழிக்கனும்


வீணாகும் பொழுதுகள்
வீசி எறியும் வைரங்கள்
காணாமல் போகுமுன்
கழித்திடு நல்வழியில்

தேனாக இனித்திடும்
திகட்டாத நேரத்தை
தீர்ந்திடுமுன் செலவிடு
தீய வழி தவிர்த்திட்டு

மணித்துளிகள் யாவுமே
கரைந்திடும் பனித்துளி
மண்ணோடு கரையுமுன்
புகழோடு வாழ்ந்திடு

தினம் கழியும் நேரமோ
திரும்பாத பயணமே
இனம்காணும் காலத்தை
இன்றே நீ நினைத்திடு

காலையும் மாலையும்
கண்சிமிட்டும் நேரமாம்
காலமும் கியாமமும்
கைக்கு எட்டும் தூரமாம்

கிடைத்திட்ட நேரத்தை
படைத்திட்ட இறையை வணங்கு
கழித்திடும் காலத்தை
செழிப்பாக்கி வாழப்பழகு

பொன்னான நேரத்தை
பொறுப்போடு கழித்திடு
புண்ணியம்பல செய்திட்டு
புதுமைபல படைத்திடு
அதிரை மெய்சா
குறிப்பு : இந்த கவிதை கடந்த [ 26-03-2015 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. கீழே உள்ள காணொளியில் 16:15 வது நிமிடத்தில் வாசிக்கப்படுகிறது.

1 comment:

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.