Sunday, April 19, 2015

அழகு !

ஒவ்வொரு அழகினிலும்
வெவ்வேறு தோற்றமுண்டு
ஒவ்வாதவை யாதுமில்லை
ஒப்புவதே அழகின் மகிமை

இயற்கைகள் யாவையுமே
ஈடியில்லா பேரழகு
இப்புவியைப் படைத்திட்ட
இறையோனைச் சேருமழகு

மேனியழகு அனைத்துமே
மின்னிமறையும் பொய்யழகு
மேலோங்கி அழகுபெற
மென்மையாய் இருப்பதழகு

தேன்மொழித் தமிழ் மொழியே
திகட்டாத சொல்லழகு
திண்ணமாய் அரவணைக்க
தாயன்பே தனியழகு

வான்மழை பொழிந்திட்டால்
இவ்வையகமே அழகோஅழகு
வறுமை எங்கும் நீங்கி விட்டால்
வரியோர்கள் வாழ்வழகு

மனிதனாய்ப் பிறந்தது
மகத்தான பேரழகு
மடமை நீக்கி வாழ்வது
மானிடத்திற்கே சேர்க்குமழகு

மனிதரையும் புனிதராக்கி
மாற்றுவதோ செயழழகு
மதியிழந்த மூடனுக்கு
விதிசெய்யும் சதியழகு

நல்வரன் அமைந்திட்டால்
இல்லறமோ என்றுமழகு
நாமொன்றாய் இணைந்திருந்தால்
நகர் முழுதும் அமைதியினழகு

நலிந்தோர்கள் எழுந்துவிட்டால்
நாடு செழிக்கும் கொள்ளையழகு
நன்மைகள் செய்து வந்தால்
நல்லோராய்ப் போற்றுமழகு

அழகில் சிறந்தது அகத்தினழகு
அதைமுதலில் அறிந்திட்டு
அன்பொழுகப்பழகு

அழகென வர்ணித்த
அத்தனைக்கும் சொந்தக்காரன்
அகிலத்தைப் படைத்துக்காக்கும்
ஆண்டவனே நிலையான அழகு
அதிரை மெய்சா
குறிப்பு : இந்த கவிதை கடந்த [ 18-12-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. கீழே உள்ள காணொளியில் 33:20 வது நிமிடத்தில் வாசிக்கப்படுகிறது.

4 comments:

  1. அழகுண்டு என்பதை...உம் பாவின்
    வரிகளில் பதித்துவிட்டாய் ....அழகின் அருமை

    அழகை எழுத
    எத்தனிக்கும் போதெல்லாம்
    உம் வரிகள் வந்து
    வார்த்தைகளைக் கலைத்துச் செல்கின்றன...!

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கருத்திட்டு தட்டிக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

      Delete
  2. Nice Line
    மனிதனாய்ப் பிறந்தது
    மகத்தான பேரழகு
    மடமை நீக்கி வாழ்வது
    மானிடத்திற்கே சேர்க்குமழகு
    அழகில் சிறந்தது அகத்தினழகு
    அதைமுதலில் அறிந்திட்டு
    அன்பொழுகப்பழகு

    ReplyDelete
    Replies
    1. கருத்திட்டு கவிவரிகளை ரசித்து வாசித்தமைக்கு மிக்க நன்றி.

      Delete

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.