Saturday, May 10, 2014

அமைதி !

ஆன்மாவில் உறங்கும் நிசப்தம்
காண்பவரே அமைதிகொள்வர்
அதில்கிட்டும் அமைதியினை
அகம் நிறைத்து மகிழ்ந்திடுவர்

ஆறுதலில் மாறுதலும்
அமைதியினை குழைத்துவிடும்
ஆசைகளும் அதிகமானால்
அமைதிக்கு பங்கம் விளைக்கும்

ஆகாயப்பயணத்திலும்
அண்டையரின் சண்டையிலும்
நாகாய்ந்து நடுக்கத்தில்
நெஞ்சதிர்ந்து அமைதியிழப்பர்

அதிசயங்கள் பலபெற்றும்
அமைதி பெற நேரமில்லை
ஆதிக்க கண்டுபிடிப்பில்
அமைதியடைந்தோர் யாருமில்லை

துன்பம்வந்த போதினிலும்
துவண்டிடாது பொருமைகாத்தால்
இன்பம்வந்து இருகணைத்து
ஈடில்லா அமைதி தரும்

அன்னையின் மடியினிலும்
திண்ணமாய் அமைதி கிட்டும்
அன்பு காட்டும் நெஞ்சத்திலும்
அமைதி என்றும் நிலைத்திருக்கும்

மனம் தரும் அமைதியினை
நற்குணம் கொண்டு அடைந்திடலாம்
மாறாக நடந்துகொண்டால்
மன அமைதி இழந்திடலாம்

படைத்தவனை வணங்கிட்டால்
பாரெங்கும் அமைதியுறும்
பாமரனும் உணர்ந்திட்டால்
புவியெங்கும் பூத்து நிற்கும்

அமைதிக்கு நல் மருந்து
அகம் நிறைந்த நற்ச செயலே
அறியாதோர் வாழ்வினிலே
அமைதியொரு ஆழ்கடலே
அதிரை மெய்சா 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.