Friday, September 20, 2013

சிநேகிதன் !


 
 சிறு பருவம் முதல்
சிம்ம சொப்பனமாய் திகழ்ந்து
முழு மனதையும் சூறையாடிய
முகமூடிக்கொள்ளையன் தான்
சிநேகிதன்...!!!

பயிலச்சென்ற பாடசாலையில்
படிப்பினையை பாடமாய் பகிர்ந்து
பகையவரும் புகழச்செய்து
பாரிருள் போக்கும் உறவு தான்
சிநேகிதன்...!!!

சீண்டியவன் சிரம் தாழ்த்தி
சிங்கமென நடக்கவைத்து
நகர் வளத்தை சுற்றி காட்டி
நாகரீகம் கற்றுத்தரும் உறவு தான்
சிநேகிதன்...!!!

துணைவியவள் துறந்தாலும்
தூணாக துணை நின்று
கலங்கிய விழி துடைத்து
காத்துப் போற்றிடும் உறவு தான்
சிநேகிதன்...!!!

ஏழ்மை என்று பாராமல்
ஏற்ற தாழ்வாய் நினைக்காமல்
தாயாய் சேயாய் அரவணைக்கும்
தரம் மிக்க உறவு தான்
சிநேகிதன்...!!!

இரத்த உறவு இல்லாமல்
மொத்த உறவும் ஓர் உருவாய்
அகிலத்தில் கண்டெடுத்த
அழியாத உறவு தான்
சிநேகிதன்...!!!

கஷ்டத்தில் பங்கெடுத்து
களமிறங்கி துயர் துடைத்து
செத்த பின்னும் செவி மடுத்து
சிந்தை சொல்லும் உறவு தான்
சிநேகிதன்...!!!

உறவுக்கு கை கொடுத்து
உரிமைக்கு குரல் கொடுத்து
உணர்வுக்கு உயிர் கொடுக்கும்
உன்னத உறவு தான்
சிநேகிதன்...!!!

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.